உலக அமைதி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்காக அனைவருடனும் உரையாட RSS தயாராக இருப்பதாக, அதன் அகில பாரதிய பிரசாரத் தலைவர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகரிக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதுடன், RSS-ன் நூற்றாண்டு கால அனுபவங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதே RSS தலைவர் மோகன் பாகவத்தின் இங்கிலாந்து பயணத்தின் நோக்கம் என கூறினார்.
அரசுகளுக்கு இடையிலான தூதரக ரீதியிலான உரையாடல்களுக்குத் தனி முக்கியத்துவம் உண்டு என்றாலும், நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த மக்களுக்கிடையிலான நேரடித் தொடர்பும் உரையாடலும் சம அளவில் அவசியமானவை என்று அவர் கூறினார்.
கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் அடிப்படையில் செயல்படும் உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பான ஆர்எஸ்எஸ், உலக அளவில் முக்கியப் பங்காற்ற முடியும் என்று அம்பேகர் குறிப்பிட்டார்.
அரசு அளவிலான உரையாடல்களுடன் இணைந்து, மக்களுக்கிடையிலான மற்றும் கலாச்சாரங்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாகவே பகவத்தின் இங்கிலாந்து பயணம் அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
மோகன் பகவத்தின் இங்கிலாந்து பயணத்தின் போது நடைபெறும் உரையாடல்கள், இந்தியாவின் கலாச்சாரக் கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கவும், தற்போது நிலவும் கருத்துகளைச் சரிசெய்யவும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே, லண்டன் சென்றுள்ள மோகன் பாகவத், ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் மற்றும் கல்சா ஜாதா குருத்வாராவுக்கு சென்ற நிலையில், ஜைனக் கோயிலுக்கும் செல்ல உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும், நாளை நடைபெறும் ‘Celebration of Oneness’ நிகழ்ச்சியில், இங்கிலாந்து முழுவதிலும் இருந்து 310-க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் பங்கேற்க உள்ளதாக சுனில் அம்பேகர் தெரிவித்தார்.
மாறுபட்ட கருத்துகள் இருப்பது ஜனநாயகத்தில் இயல்பானது என்றும், தங்களுடன் உரையாட விரும்புவோருடன் RSS தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
















