நிலவுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் விண்வெளி வீரர்களை அனுப்பத் தயாராகி வரும் இந்தியா, அதற்கான முன்னேற்பாடு ஆய்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஸ்டார்ஷிப் விண்கலத்தின் மூலம் செவ்வாய் மற்றும் நிலவுக்கு ஏவுவதற்காக விண்வெளி வீட்டின் மாதிரியை இந்தியா உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடி நாசா ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இந்தியாவும் Mars Orbiter Mission தொடங்கியது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான தனது முதல் ஆளில்லாத விண்கலமான மங்கள்யானை 2013ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி இந்தியா விண்ணில் ஏவியது. கிட்டத்தட்ட ஓராண்டுக்குள் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டனுக்குப் பிறகு செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையைப் பெற்ற இந்தியா, முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் நாடு என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்தது.
உலகளவில் மிகக் குறைந்த செலவில் சுமார் 74 மில்லியன் டாலர் செலவில் அனுப்பப்பட்ட செவ்வாய் ஆய்வுத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத் தக்கது.
ஆரம்பத்தில் 6 மாதங்கள் மட்டுமே திட்டமிடப்பட்ட இப்பயணம், செவ்வாய் வட்டப்பாதையில் பல ஆண்டுகள் வெற்றிகரமாகத் தனது பணியைத் தொடர்ந்தது.
செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்றும் முயற்சிகளிலும் ஈடுபட்டுவரும் அமெரிக்கா, செவ்வாய்க் கிரகத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப வீடுகளை அமைக்கத் தயாராகி அடிப்படை வீட்டின் வடிவங்களை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த இந்திய அறிவியல் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இஸ்ரோவின் ககன்யான் விண்வெளி வீரரான குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா ஆகியோர் இணைந்து, செவ்வாய் மற்றும் நிலவில் மனிதர்கள் தங்குவதற்காக பிரத்யேக விண்வெளி வீட்டின் மாதிரியை வடிவமைத்துள்ளனர்
Bhartiya Extraterrestrial Expandable Modular Habitat என்பதன் சுருக்கமே பீம் (BHEEM) ஆகும்.
இந்த விண்வெளி வீடு முக்கோணம், சதுரம் ஐங்கோணம் போன்ற மொத்தம் 422 வடிவியல் பலகைகளால் ஆனதாகும். ராக்கெட்டுகளில் மிகக் குறைந்த இடத்தை மட்டுமே அடைக்கும்படி மடிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
நிலவு மற்றும் செவ்வாய் கிரகப் பயணங்களுக்காக உருவாக்கப்பட்டு வரும், ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் என்ற பிரம்மாண்டமான, முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் சுமை வரம்புகளை மையமாகக் கொண்டே பீம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒருமுறை விண்வெளிப் பயணத்துக்கான சுமார் 800 கன மீட்டர் payload கொள்ளளவுக்குள் இந்த ஒட்டுமொத்த பேனல்களையும் எளிதாக அடுக்கி அனுப்பிவிட முடியும் என்று கூறப் படுகிறது.
விண்வெளிக்குக் கொண்டு சென்ற பிறகு, இந்தப் பலகைகளை எளிதாக விரித்து ஒன்றிணைக்க முடியும் என்றும், முழுமையாக விரிவடையும் போது, இது சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) விட இரண்டு மடங்கு பெரிய வசிப்பிடமாக மாறும் என்றும் கூறப்படுகிறது.
16 விண்வெளி வீரர்கள் 6 மாதங்களுக்கும் மேலாகத் தங்கும் வசதி கொண்ட இந்த விண்வெளி வீட்டில் தூங்கும் அறை, உடற்பயிற்சிக் கூடம், மருத்துவ அறை, ஆய்வகம் மற்றும் தாவரங்களை வளர்க்கும் பசுமைக்குடில் (Greenhouse) ஆகியவை திட்டமிடப்பட்டுள்ளன.
ஏற்கெனவே செவ்வாய்கிரகத்தின் கடுமையான கதிர்வீச்சு மற்றும் தீவிர வெப்பநிலையைத் தாங்குவதற்காக, செவ்வாய் கிரகத்தின் மண்ணைப் பயன்படுத்தி Self-healing பாக்டீரியா செங்கற்களை உருவாக்கும் ஆராய்ச்சியிலும் இந்திய அறிவியல் கழகம் ஈடுபட்டுள்ளது.
மேலும் விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்வதை நேரடியாகப் பயிற்சி செய்வதற்காக, லடாக்கின் ‘சோ கர்’ (Tso Kar) பள்ளத்தாக்கில் கடல் மட்டத்திலிருந்து 4,530 மீட்டர் உயரத்தில் (HOPE) Himalayan Outpost for Planetary Exploration என்ற செவ்வாய் கிரகப் போலி நிலப்பரப்பு நிலையத்தையும் இஸ்ரோ அமைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தைப் போன்றே மிகக் கடுமையான குளிர், குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இந்த பிரத்யேகக் கூடாரத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி, செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்தியாவின் ககன்யான் விண்வெளித் திட்டம் மற்றும் எதிர்கால செவ்வாய் கிரக ஆய்வுகளுக்கான மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக இந்த ‘மேட் இன் இந்தியா’ விண்வெளி வீடு பார்க்கப்படுகிறது.
மேலும் இந்தியாவில் வடிவமைக்கப்படும் பீம் விண்வெளி வீடு ஒரு ஆச்சரியம் ஒரு விண்வெளி அறிவியல் வெற்றி மட்டுமல்ல. ஒருநாள் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் மட்டுமல்ல, மற்றொரு உலகிலும் வாழ்வதற்கு இந்த பீம் உதவக்கூடும்.
















