சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தபோது, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், மின்சார வாரியத்தின் தலைமையகத்தில் டெண்டர்கள், கொள்முதல்கள் தொடர்பான விசாரணையின் ரகசியத் தரவுகள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி மற்றும் மின்சார கொள்முதல் தொடர்பான முக்கியமான தரவுகளை அழிக்கும் நோக்கில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதா என சந்தேகம் எழுந்துள்ளது.
மே 16, 17ஆகிய தேதிகளில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் குறைவாகப் பணியில் இருந்தபோது திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும், மே 20ஆம் தேதி பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள் தங்கள் கணினிகளிலிருந்து கோப்புகள் காணாமல் போனதைக் கண்டறிந்தபோது இது வெளிச்சத்திற்கு வந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.
மின்வாரிய தலைமையகத்தின் 4, 5,7,10வது தளங்களில் கடந்த 5 ஆண்டுகளாக முன்பே சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், சிசிடிவி கேமராக்களை பொருத்த அதிகாரிகள் பரிந்துரைத்தபோதிலும், அதன் செலவு மிக அதிகம் எனக்கூறி கண்காணிப்புப் பொறியாளர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மின்வாரிய மூத்த அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















