டெல்லி உணவு விடுதி தீ விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அது பற்றிய ஓர் செய்தித்தொகுப்பு.
தெற்கு டெல்லியின் மால்வியா நகரில் டெல்லி மாநில அரசின் ‘Bed and Breakfast’ திட்டத்தின் கீழ் உரிமம் பெற்றிருந்த Flourish Stay B&B’ என்ற உணவு விடுதியில் புதன் கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
தீ வேகமாக பரவியதால் புகை மண்டலமாக மாறிய அந்த உணவு விடுதியில் தப்பித்து ஓட மக்கள் முண்டியடித்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது.
Bed and Breakfast’ திட்டத்தின் கீழ், ஆறு அறைகளை மட்டுமே இயக்க டெல்லி அரசு உரிமம் வழங்கியிருந்த நிலையில், அந்த உணவு விடுதியில் சட்டவிரோதமாக 25 அறைகளை இயக்கி வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது விதிமீறல் மற்றும் பாதுகாப்புத் தரம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
சமூக ஊடகங்களில் வைரலான தீ விபத்து வீடியோ காட்சிகளில் கொழுந்துவிட்டு எரியும் தீ ஜுவாலைகளில் இருந்தும், அடர்த்தியான புகையிலிருந்தும் தப்பிக்கும் அவசர முயற்சியாக, இரண்டு பெண்கள் கட்டிடத்திலிருந்து கீழே குதிப்பது தெளிவாக தெரிகிறது.
தகவல் கிடைத்ததும் எட்டு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து, தீ விபத்தில் சிக்கியவர்களைப் பாதுகாப்பாக மீட்டனர்.
இதுவரை 21பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஹோட்டல் உரிமையாளர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ள காவல்துறையினர் அந்த ஹோட்டலுக்கு, உள்ளே வருவதற்கும் வெளியேறுவதற்கும் ஒரே ஒரு வழி மட்டுமே இருப்பதாக கூறியுள்ளனர்.
அந்த உணவு விடுதியில் தீ பாதுகாப்புக்கான NOC வைத்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திய டெல்லி தீயணைப்புத்துறை தலைவர், அந்த கட்டிடத்தின் அமைப்பே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகளின்கீழ் தீ பாதுகாப்பு தடையில்லாச் சான்றிதழைப் பெறுவதற்குத் தகுதிபெறும் வகையில் அமையவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் வேறு பல ஹோட்டல்களிடமும் தீ பாதுகாப்பு தடையில்லாச் சான்றிதழ்கள் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
டெல்லியின் மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக உயிர்கள் பலியானது மிகவும் துயரமானது என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா 50,000 ரூபாயும் நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, பாதிக்கப் பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் துயரமான நேரத்தில் டெல்லி அரசு பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் உறுதியாக நிற்கும் எனத் தெரிவித்துள்ளார்.
















