சென்னை மாநகராட்சியில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கும் நகரமைப்பு பிரிவில் லஞ்சம், முறைகேடு போன்ற புகார்களால், அப்பிரிவில் பணி புரிந்த அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் 3 மாடிகள் வரை கொண்ட வீடு, வணிக வளாகம், தொழில் நிறுவனங்கள் கட்ட அனுமதி வழங்கப்படுகிறது.
இதில் 5 ஆயிரம் சதுர அடி வரை அந்தந்த மண்டலங்களிலும், 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் சதுர அடி வரை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் மாளிகையில் உள்ள நகரமைப்பு பிரிவிலும் பயனாளர்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆவணங்களை பரிசீலித்து 27 நாட்களுக்குள் கட்டுமான விதிமுறைகளை நிர்ணயித்து அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவு மற்றும் மண்டலங்களில் வீதிமீறல், லஞ்சம் போன்ற காரணத்தால் பல விண்ணப்பங்கள் காரணம் இல்லாமல் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலர் ககன்தீப்சிங் பேடி உத்தரவின்பேரில் மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பணிபுரிந்த கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர் உள்ளிட்ட 12 பேர் இதர பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இதர பிரிவுகளில் இதே பொறுப்புகளில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள், ஊழியர்கள் நகரமைப்பு பிரிவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
















