திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜூன் 14 -ம் தேதி, சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. பின்னர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போதும், புழல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு செந்தில் பாலாஜி தரப்பு முறையீடு செய்தனர். ஆனால், அந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மனு மீதான விசாரணை வரும் 16 -ம் தேதிக்குத் தள்ளிவைத்தது.