எந்த ஒரு நோயாளிக்கும் மாரடைப்பு ஏற்பட்டவுடன் உடனே சிகிச்சை அளிக்கப்படுவது அவசியம் என்றும் அதற்கு சிபிஆர் எனப்படும் இதய நுரையீரல் புத்துயிர் நடைமுறை குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி மிக முக்கியமானது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதய நுரையீரல் புத்துயிரூட்டல் எனப்படும் சிபிஆர் பயிற்சி குறித்து தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் நாடு தழுவிய பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது
இந்த நிகழ்ச்சியை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் தொடங்கி வைத்தார். மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல், டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மாரடைப்பு சிகிச்சைக்கான முதலுதவி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த முன்முயற்சி பாராட்டத்தக்கது.
நல்ல இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பதும், சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொள்வதும் முக்கியமானது. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, சிபிஆர் நுட்பத்தில் முதலுதவி அளிக்கப்பட்டால் அது உயிர்களைக் காப்பாற்ற உதவும்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி தேவைப்படுவதால் இந்த சிபிஆர் நுட்பம் முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு, போதிய அறிவு மற்றும் பயிற்சியுடன் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றார்.
தேசிய அளவில் நடத்தப்படும் நாட்டின் முதல் சிபிஆர் விழிப்புணர்வு இயக்கம் இதுவாகும். இந்த இயக்கத்தின் போது, மாணவர்கள், மருத்துவத் துறையினர் மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு இணையதளம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.