மத்திய கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) இஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் திட்டங்கள் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
மத்திய கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) இஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் திட்டங்கள் உள்ளதா என்று விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு, மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “மத்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் 2019-ன் படி பல்கலைக்கழகங்களை ஒரே அலகாகக் கொண்டே பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இச்சட்டப்படி அட்டவணைப்படுத்தப்பட்ட சில பல்கலைக்கழகங்கள் மற்றும் சில விதிவிலக்குகள் பெற்ற நிறுவனங்களைத் தவிர, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. மத்திய கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்யும் அனைத்து விதமான பணிகளிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது.
ஆனால், தற்போது வரை ஓ.பி.சி. இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசால் எதுவும் திட்டமிடப்படவில்லை. கல்வி நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு வெளியாவதும், அவை நிரப்பப்படுவதும் தொடா்ந்து நடக்கின்ற செயல்முறையாகும்.
காலிப் பணியிடங்கள் அதிகரிப்பதற்கு பணி ஓய்வு, ராஜினாமா, மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. அவ்வாறு காலிப் பணியிடங்கள் எழுகின்றபோது அதை நிரப்பும் அதிகாரம் நாடாளுமன்ற சட்டங்களின் கீழ் தன்னாட்சி அமைப்புகளாக உருவாக்கப்பட்ட மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே உள்ளது.
தற்போது வரை ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உள்பட 6,080-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் சிறப்பு நியமன முகாம்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. இதில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 871 பேரும், பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த 426 பேரும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த 1,424 பேரும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.