மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021- 2022 ஆண்டு டெல்லி அரசு கொண்டு வந்த மதுபான கொள்கை மூலம் சில குறிப்பிட்ட மதுபான நிறுவனங்கள் பலன் அடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டில்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்தார்.
பின்னர் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தனது உறவினர் திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரி டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா ஜாமின் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி பிப்.13 முதல் 15-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அமலாக்கத்துறை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தநிலையில் மணிஷ் சிசோடியாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.