டெல்லி என்சிஆர் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கையெறி குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தான் உளவுப்பிரிவு ஏஜென்டின் கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் ஏஜென்டான ஷாசாத் பாத்தி என்பவர், டெல்லி உட்பட பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டார். இதற்காக, இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தி அவர்களுக்கு பயிற்சியையும் வழங்கியுள்ளார்.
அவ்வாறு தயார்படுத்தப்பட்டவர்கள் டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர். இதன் காரணமாக நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய போலீசார், மத்திய பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த விவேக் பஞ்சாரா என்பவரை கடந்த 16ஆம் தேதி கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்வீர் என்பவரைக் டெல்லியில் கடந்த 18ஆம் தேதி கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும், சதித் திட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளும், ஆடியோ பதிவுகளும் அடங்கிய இரு மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் ரகசிய குழு அமைத்து, திட்டத்திற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 11 நாட்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
















