ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே நாம் இடர்களைக் குறைத்து, பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் என ஆசியான் கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற இந்தியா-ஆசியான் அமைச்சர்கள் அளவிலான கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, கடல்சார் வர்த்தகத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். ஆற்றல், உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை இனி சாதாரணமாக கருத முடியாது என்றும், கடல்சார் வர்த்தகத்தை நாம் பெரிதும் சார்ந்திருப்பதால், அதுவும் கவலைக்குரிய ஒரு விஷயமாக மாறக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.
2026ஆம் ஆண்டு ஆசியான்-இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டாக அமைந்துள்ளது எனக்கூறிய அவர், கடல்சார் பாதுகாப்புக்கு எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய முடியும் என்பதை நினைவூட்டுகிறது என தெரிவித்தார். மேலும், இந்தியா-ஆசியான் செயல்திட்டமானது வர்த்தகம், முதலீடு, திறன் மேம்பாடு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கியது எனவும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
















