டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட பாதுகாப்பு எச்சரிக்கை சுற்றறிக்கை தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.
மருத்துவர் தீபேஷ் திவாகரன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து எழுப்பியுள்ள கேள்விகள் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த 17ஆம் தேதியே அமெரிக்க தூதரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகள், ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற வளாகம் மற்றும் கிசான் காட் ஆகிய பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்திய ஊடகங்கள் பரவலாக செய்தி வெளியிடுவதற்கு முன்பே பஞ்சாப் விவசாயிகள் பேரணியாக வரவுள்ள தகவலை அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு எவ்வாறு இவ்வளவு துல்லியமாக கணித்தது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போராட்டங்கள் குறித்த தகவல்கள் ஏற்கனவே பகிரங்கமாகத் தெரிந்தவைதான் என்றாலும், ஒரு வெளிநாட்டுத் தூதரகம் டெல்லியின் பாதுகாப்பு நிலவரத்தை மிகத் துல்லியமாக கணித்திருப்பது எவ்வாறு சாத்தியம் என்றும், இதன் பின்னணியில் வெளிநாட்டு உளவு அமைப்புகளின் பங்கு ஏதேனும் உள்ளதா எனவும் சந்தேகங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க தூதரகத்தின் இந்த முன்னெச்சரிக்கை சுற்றறிக்கையும், அதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த விமர்சனப் பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
















