பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி , பொதுமக்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நனயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆவின் பால் விநியோகம் கடுமையாகக் குறைந்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள செய்தி மிகுந்த கவலையளிக்கிறது.
சாதாரண நுகர்வோரும் முகவர்களும் இதனால் அன்றாடம் அவதியுற்று வரும் வேளையில், விஜய் அரசு எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்று உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறித் தப்பித்துக் கொள்ள முயல்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
அதிகக் கொழுப்பில்லா இதர சத்துகள் (SNF) நிறைந்த பாலுக்குத் தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ₹50 வழங்கும்போது, ஆவின் வெறும் ₹35 மட்டுமே வழங்குவதால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களுக்கு மாறுகின்றனர்;
இதுவே தட்டுப்பாட்டிற்கு முதன்மைக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளையும், ஏழை எளிய மக்களையும் ஒரே நேரத்தில் தவெக
அரசு தவிக்கவிட்டுள்ளது.
எனவே, பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை ஆவின் நிர்வாகம் உடனடியாக உயர்த்தி வழங்கி, பால் கொள்முதலைத் தடையின்றித் தொடர்வதோடு, பொதுமக்கள் அனைவருக்கும் தட்டுப்பாடின்றி ஆவின் பால் கிடைப்பதை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















