நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இன்றைய நிகழ்ச்சியில் மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால், மாணவர்களின் போராட்டத்தை மத்திய அரசு கடுமையாக ஒடுக்கியது என்றும், இந்த விவகாரம் சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீட் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க அரசு முதல் நாளிலிருந்தே தயாராக உள்ளதாக தெரிவித்தார். ஆனால், எந்த விதியின் கீழ் விவாதம் நடத்த வேண்டும், எப்போது நடத்த வேண்டும், எவ்வளவு நேரம் நடத்த வேண்டும் என்பது குறித்து அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்து சபாநாயகர் முடிவு எடுப்பார் என கூறினார்.
மேலும், நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என கிரண் ரிஜிஜு குறிப்பிட்டார்.
இதனை அடுத்து பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளைச் சார்ந்ததல்ல என்றும், மாணவர்களின் எதிர்காலம் சார்ந்தது எனவும் தெரிவித்தார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் ஆடைகளை கிழித்து, கொடூரமாக தாக்கிவிட்டு, தற்போது விவாதத்திற்கு அழைப்பது நியாயமா எனவும் கேள்வி எழுப்பினார்.
















