நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை, நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை என மாநிலங்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்வைத்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதே கோரிக்கையை முன்வைத்து, அவை நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்த பின்னரும், அதை ஏற்க மறுத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை என மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
















