சோதனை, விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது எனக்கூறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது. இதனை தொடர்ந்து, சோதனை என்ற பெயரில் துன்புறுத்த கூடாது என காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசு தரப்பில், மனுதாரருக்கு விரிவான பதில் மனுதாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இதனை அடுத்து மனுதாரர்கள் தரப்பில், குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் பெற்ற தங்களை வேறு வழக்குகளில் கைது செய்யக்கூடும் என்ற அச்சம் உள்ளதாகவும்,
சோதனை, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் பெற்ற இருவரும் சரண் அடையாத நிலையில், போலீசார் துன்புறுத்தக் கூடாது என எவ்வாறு கோர முடியும் என கேள்வி எழுப்பினார்.
மேலும், எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
















