மேற்குவங்கத்தில் மாற்றத்திற்கான அலை முதல்கட்ட வாக்குப்பதிவில் முத்திரையாக பதிந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம், டம் டம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அளிக்கப்படும் ஆதரவு வெற்றிக்கான அறைகூவல் என தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரசின் கொடுங்கோல் ஆட்சியால் மேற்குவங்கத்தில் ஜனநாயக கோயில் தனது புனிதத்தை இழந்தது என்றும், முதல்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஜனநாயக கோவிலை மீண்டும் கட்டியெழுப்பிவிட்டனர் எனவும் கூறியுள்ளார். மேலும், மேற்குவங்கத்தில் ஒவ்வொரு மகளின் கனவுகள் நசுக்கப்படுவதை பாஜக அனுமதிக்காது எனக்கூறிய பிரதமர் மோடி, பாஜக அரசு அமைந்தவுடன் ஒவ்வொரு அநீதிக்கும் பாடம் கற்றுத்தரப்படும் என உத்தரவாதம் அளித்தார்.
















