ராமேஸ்வரத்தில் ஏஜெண்டுகள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி அகற்றப்பட்டது தொடர்பாக அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். ராமேஸ்வரம் விவேகானந்தா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சி ஏஜெண்டுகளின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், தேர்தல் ஏஜெண்டுகள் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தேர்தல் அதிகாரி ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தின் பவர் பேட்டரியை ரகசியமாக அகற்றியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பா.ஜ.க, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், தேர்தல் அதிகாரி விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படுவதாகக் கூறி வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லவிடாமல் வாகனங்களை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில், தேர்தல் அதிகாரி பேட்டரியை அகற்றும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
















