அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டிய திமுக எம்.பி .கிரிராஜன், அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சொத்துக்குவிப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த நீதிபதிகள், ஆதாரங்கள் உள்ளன என அமலாக்கத் துறை அதிகாரிகள் திருப்தி அடைந்தால் மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடியும் என தெரிவித்தனர்.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆதாரங்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
















