சித்ரா பௌர்ணமியையொட்டி, பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானைத் தரிசனம் செய்தனர்.
சின்னக்குமாரசாமி, தம்பதி சமேதராகப் பலவகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுத் தங்கத் தேரில் எழுந்தருளினார்.
பௌர்ணமி நிலவின் ஒளியில் தங்கம் மின்ன, மேளதாளங்கள் முழங்கத் தேர் புறப்பட்டது. வெளிப்பிரகாரத்தில் தேர் வலம் வந்தபோது, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.
















