கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்று 10 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியமைக்கிறது.
கேரளம் மாநிலத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஆளும் சி.பி.எம். கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 100க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதன்மூலம் கேரளாவில் 10 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 35 இடங்களிலும், என்.டி.ஏ கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இதனிடையே, தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப், இடதுசாரி ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் தெளிவான தீர்ப்பு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
















