நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? என முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நடந்து கொண்டிருக்கும் சில சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
ஆளுங்கட்சியின் ஆசை வார்த்தைகளை நம்பி கட்சி தலைமையின் நிலைப்பாட்டிற்கு எதிராக சிலர் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள கே.பி.முனுசாமி, அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்து கையெழுத்திட்டதை மறுக்கும் அளவிற்கு பதவி ஆசை முற்றிவிட்டதா? என வினவியுள்ளார்.
தவெக ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் எந்த பங்கும் வகிக்கவில்லை என பாஜக கூறிய பிறகும் கூட்டணிக் கட்சி என்று யோசிக்காமல் அமைச்சர் பதவி மோகத்திற்காக சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்துவிட்டார்களே எனவும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் ஈர்த்து அமைச்சர் மோகம் காட்டி மாய வலை வீச முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசும் சட்டமன்ற உறுப்பினர் இல்லத்திற்கு செல்வது எந்த விதத்தில் நியாயம் எனவும், நான்காம் தர அரசியல்வாதி போல செயல்படும் நீங்களா தூய சக்தி? எனவும் முதலமைச்சர் விஜய்க்கு கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
















