வடமேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்ற நிலையில் ஒடிசாவை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக உருவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் காற்றழுத்தத் தாழ்வுப்பாதை ஏற்பட்டுள்ளதால் வரும் 21ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வடமேற்கு வங்கக் கடல் மற்றும் மேற்கு வங்கம்-வடக்கு ஒடிசா இடையேயான கடலோரப் பகுதிகளில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம் மேலும், வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதிகள், வங்கதேசம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
















