பொதுக்குழுவை கூட்டுவதற்கு சி.வி.சண்முகம் தரப்பினர் கையெழுத்து கேட்டால் போட வேண்டாமென, தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று சி.வி.சண்முகம் தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கவும், பொதுக்குழுவை கூட்டவும் வலியுறுத்தி, உறுப்பினர்களை சந்தித்து சி.வி.சண்முகம் தரப்பு கையெழுத்து பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா, பி.வி.ரமணா உட்பட பல்வேறு மாவட்டச் செயலாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து தன்னை சந்திக்கவந்த நிர்வாகிகளிடம், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பு பொதுக்குழு கூட்டுகிறோம் என்ற பெயரில் கையெழுத்து கேட்டால் போட வேண்டாம் என அறிவுறுத்தினார். மேலும் தனக்கு ஆதரவாக உள்ள மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ-க்கள் அனைவரும், அவரவர் சார்ந்த மாவட்டங்களில் கட்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
















