நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் சட்டவிரோதமாக பணம்பறிக்கும் இடைத்தரகர்கள் மீது தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
நெல்கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்களின் தலையீடு இருப்பதாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏ.வெங்கடேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் டோக்கன் நடைமுறையை ரத்து செய்து விவசாயிகளே நேரடியாக அதிகாரிகளை அணுகும் முறையை அமல்படுத்த உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது ஆஜரான காவல்துறை தரப்பு, இடைத்தரகர்களால் பணம் பறிக்கப்படுவது தொடர்பாக எந்த புகாரும் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனுதாரரின் வாதத்தில் உள்ள தீவிரத்தை கருத்தில் கொண்டு இரண்டு வாரங்களில் மனு பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் தகுந்த உத்தரவை பிறப்பிக்குமாறு கூட்டுறவு துறை, லஞ்ச ஒழிப்புத் துறை உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.
















