தமிழக கல்வித்துறையில் உள்ள குளறுபடிகளை நீக்கி, மாணவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி, ABVP மாணவர் அமைப்பினர் முதலமைச்சர் விஜயிடம் மனு அளித்தனர். சென்னை தலைமை செயலகத்தில் ABVP மாநில செயலாளர் பன்னீர் செல்வம் தலைமையில் சென்ற மாணவர் பிரதிநிதிகள் குழுவினர், முதலமைச்சர் விஜய்யை சந்தித்து 17 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தனர். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்கள், 17 கோரிக்கைகள் வைக்கப்பட்டதில் 8 முக்கிய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததாக தெரிவித்தனர். ABVP அமைப்பு எந்தவொரு மொழியையும் கட்டாயமாகத் திணிப்பதற்கு உறுதுணையாக இருக்காது எனவும், தனியார் பள்ளிகளில் அரசியல்வாதிகளின் குழந்தைகள் மும்மொழிகளை படிப்பதாகவும், அப்படியிருக்கையில், கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு ஏன் மறுக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினர்.
















