சென்னை மணலியில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
மணலி பெரியதோப்பு வ.உ.சி. கிராம சங்கத்தில் இருந்து, ஒரு பிரிவினர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் செயல்பட்டு வந்தனர். இவ்வாறு செயல்பட்டு வரும் அறக்கட்டளைக்கு அந்த சங்கத்தில் உள்ள ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
பொதுக்குழுவை கூட்டி அதனடிப்படையில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென எதிர் பிரிவினர் முடிவெடுத்து, இதற்காக அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளித்திருந்தனர்.
இதற்கு அறக்கட்டளை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுக்குழு கூட்ட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் எதிர் பிரிவு நிர்வாகிகள் பெரியதோப்பில் உள்ள சங்க வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது மற்றொரு தரப்பினரை உள்ளே அனுமதிக்காததால் போலீசார் கண்முன்னே இருதரப்பினர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் காயமடைந்தனர். இதனிடையே, போலீசார் ஒரு தரப்பினரை வெளியே தள்ளி கேட்டை மூடியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
















