ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் அரசுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும் என நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவரான பி.பி.சவுத்ரி, குஜராத் மாநிலம் காந்திநகரில் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதன் மூலம், சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும் எனவும், அந்த தொகையை மக்கள் நலனுக்காகவும், கல்வி மற்றும் மருத்துவ வசதிகளுக்காவும் பயன்படுத்த முடியும் எனவும் கூறினார்.
அடிக்கடி தேர்தல் நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டால், நாட்டின் GDP 1.6 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். அடிக்கடி தேர்தல் நடைபெற்றால், அடிக்கடி தேர்தல் நடத்தை விதிகள் அமலாகும். இதனால், மக்கள் நலத்திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்படும். ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு வந்தால், அத்தகைய பாதிப்புகளும் இல்லாமல் போகும் என அவர் விளக்கம் அளித்தார்.
















