இந்தியா – அமெரிக்கா நாடுகளின் உறவு புதிய உயரத்தை எட்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், அமெரிக்க தூதரகம் சார்பில் சிறப்பு வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் உலக ஜனநாயக சிந்தனைகளுக்கு அடித்தளம் அமைத்ததாக தெரிவித்தார். மேலும், இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு, கடந்த கால தயக்கங்களைத் தாண்டி வர்த்தகம், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், கல்வி உள்ளிட்ட பல துறைகளில் விரிவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியா அமெரிக்காவின் மிக முக்கியமான, நம்பகமான கூட்டாளிகளில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், 21-ம் நூற்றாண்டில் உருவாகும் சவால்களையும், புதிய வாய்ப்புகளையும் இரு நாடுகளும் இணைந்து வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் நேரலையில் இணைந்த் டிரம்ப், தனக்கு பிடித்தமான நாடு இந்தியா எனவும், தலைசிறந்த தலைவரான பிரதமர் மோடி தனது நண்பர் என்றும் பாராட்டி பேசினார். மேலும், பிரதமர் மோடிக்கு தான் மிகப்பெரிய ரசிகன் என தெரிவித்த டிரம்ப், இந்தியா எதை விரும்பினாலும் அதனை செயல்படுத்த அமெரிக்கா எப்போதும் துணை நிற்கும் என கூறினார்.
















