விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக செய்யூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பனையூர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலங்களாக விசிக தலைவர் திருமாவளவனின் செயல்பாடுகளும், அரசியல் நிலைப்பாடுகளும் தனக்கு பெரும் வியப்பையும், வேதனையையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது, அரசியல் களத்திலும் தொண்டர்களிடையேயும் பெரும் குழப்பத்தை உருவாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதுகாலம் வரை சமரசமின்றி கட்டிக்காத்த கொள்கைகள், கருத்தியலில் திருமாவளவன் தடம் மாறத் தயாராகிவிட்டார் என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்துவதாகவும் பனையூர் பாபு தெரிவித்துள்ளார்.
கொண்ட கொள்கையிலும், எடுக்கும் நிலைப்பாட்டிலும் உறுதியாக இல்லாமல், அடிக்கடி நிலைப்பாடுகளை மாற்றி, குழப்பத்திலும் அவநம்பிக்கையிலும் செயல்படும் ஒரு தலைமையின்கீழ் இனியும் தன்னால் பயணிக்க இயலாது என கூறியுள்ளார்.எனவே, வி.சி.கவில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் பனையூர் பாபு தெரிவித்துள்ளார்.
















