தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் அவர் பழகியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கார்த்திக் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதை அறிந்த இளம்பெண், அவருடனான பழக்கத்தை முற்றிலும் துண்டித்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து, இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்த கார்த்திக், தனது நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். இதில், வீட்டின் முன்பகுதியில் உள்ள செருப்பு ஸ்டாண்ட் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்தில், யாருக்கும் காயம் ஏற்படாத நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய கார்த்திக் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வரும் நிலையில், பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
















