அதிமுக ஒன்றிணைந்த பிறகு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் சந்தித்த நிலையில், இருதரப்பிலும் நடவடிக்கை கோரி வழங்கப்பட்ட கடிதங்களை திரும்பப்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்புக்குப்பின் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை சந்தித்தனர். அப்போது, சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவை மீறியதற்காக மன்னிப்பு கோரி கடிதம் வழங்கினர். மேலும், இபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பில் நடவடிக்கை கோரி வழங்கப்பட்ட கடிதங்களை திரும்பப்பெறுவதாக சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி அதிமுகவில் பிளவு இல்லை என்றும், அதிமுகவினர் ஒற்றுமையாக இருந்து தோல்விக்கான காரணத்தை ஆராய்வோம் என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே, அதிமுகவை சேர்ந்த இருதரப்பினரும் அளித்த மனுக்கள் குறித்து பரிசீலனை முடிவை நாளை அறிவிப்பதாக, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.
















