காவல்துறையில் மிக உயரிய பதவியாக விளங்கும் தமிழக டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால், தனது 22வது வயதிலேயே ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். சட்டம் படித்த பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடரில் பணியில் சேர்ந்தார்.
தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கிய மகேஷ்குமார் அகர்வால், பின்னர் தமிழக காவல்துறையில் மிகச்சிறந்த புலனாய்வு அதிகாரியாக தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.
சி.பி.ஐ-யில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றிய மகேஷ் குமார் அகர்வால்,
சேலம் – சென்னை ரயிலில் நடந்த 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை கைது செய்து, தேசிய அளவில் கவனம் பெற்றார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு, உமா மகேஸ்வரி கொலை வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளிலும் மகேஷ்குமார் அகர்வால் திறமையாக செயல்பட்டார்.
இதன்பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற அவர், “காவலன்” செயலி, Face Tagger தொழில்நுட்பம், நவீன கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை காவல்துறையில் தீவிரப்படுத்தினார்.
கொரோனா காலத்தில் தமிழகத்தில் சிக்கியிருந்த 4 லட்சத்திற்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் சொந்த ஊர்களுக்கு ரயில் வசதி செய்து கொடுத்து அனுப்பியதில் முக்கிய பங்காற்றினார்.
தமிழக ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, எல்லை பாதுகாப்புப் படை டிஜிபியாக பணியாற்றினார்.
















