ஜனநாயகத்தில் விவாதங்கள் மற்றும் மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பான ஒன்று என ஆர்.எஸ்.எஸ் தேசிய பிரசார பொறுப்பாளர் சுனில் அம்பேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
அண்மையில் முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் ‘கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ என்ற நையாண்டி பக்கம் தொடங்கப்பட்டது. தொடங்கிய சில நாள்களிலேயே, அதன் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது.
இதனையடுத்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது. இது குறித்து பேசிய சுனில் அம்பேகர், இந்திய ஜனநாயகம் அனைத்து விதமான குரல்களையும், உணர்வுகளையும் உள்வாங்கிக் கொள்ளும் திறன் கொண்டது என்று குறிப்பிட்டார்.
ஜனநாயகத்தில் விவாதங்கள் மற்றும் மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பான ஒன்று எனவும் அதை ஒரு அதிர்ச்சியாகவோ அல்லது கவலையாகவோ பார்க்கத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டின் இளைஞர்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நமது ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
















