மத்திய கிழக்கில் போர் காரணமாக மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கப்பல்கள் மட்டும் எப்படி பாதுகாப்பாக வருகின்றன என்பது பற்றி மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி ஈரான் போர் தொடங்கியதில் இருந்தே ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது.
ஓமனுக்கும் ஈரானுக்கும் இடையே உள்ள இந்தக் குறுகிய ஜலசந்தி வழியாக சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறுகிறது.
போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க முடியாமல் நூற்றுக்கணக்கான கப்பல்கள் அப்பகுதியில் காத்திருக்கின்றன. கடந்த ஏப்ரல் 9ம் தேதி தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் ஹார்முஸ் ஜலசந்தி மூடியே உள்ளது.
இந்த போர்க்கால இடையூறுகள் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்து, பெரும்பாலான ஆசிய நாடுகளில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி யும் உருவாகி உள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் போர் தொடங்கியது முதலே இந்தியக் கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து வந்துள்ளன. இதன் மூலம் உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் சந்தை பாதிக்கப் பட்டுள்ள நிலையிலும், இந்தியா தனது எரிசக்தி விநியோகத்தைத் தடையில்லாமல் வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, மத்திய துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சக அதிகாரிகள் செயல்பாட்டு விவரங்களை வெளியிடாமல் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளனர்.
ஹார்முஸ் நீர்சந்தியில் இருக்கும் இந்திய மாலுமிகளின் நலனை உறுதி செய்யவும், கடல்சார் போக்குவரத்துத் தடையின்றி நடைபெறவும் வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகளில் எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள் அமைச்சகங்களுடன் இணைந்து கப்பல்களுக்கான முன்னுரிமை தீர்மானிக்கப்படுகிறது என்றும் கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஓபேஷ் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
ஒரு எல்பிஜி டேங்கர், ஐந்து கச்சா எண்ணெய் டேங்கர்கள், ஒரு இரசாயன அல்லது தயாரிப்பு டேங்கர், மூன்று கொள்கலன் கப்பல்கள், இரண்டு மொத்த சரக்குக் கப்பல்கள் மற்றும் ஒரு தூர்வாரும் கப்பல் உட்பட சுமார் 13 இந்தியக் கப்பல்கள் தற்போது ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதியில் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஆபத்துகள் இருந்தபோதிலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா தான் தொடர்ந்து கப்பல் போக்குவரத்தைத் தடையின்றி பராமரித்து வருகிறது. சொல்லப்போனால் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் அதிக எண்ணிக்கையிலான கப்பல்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது.
போர் தொடங்கியது முதலே ஷிவாலிக், நந்தா தேவி, ஜக் லாட்கி, பைன் கேஸ், ஜக் வசந்த், பிடபிள்யூ டயர், பிடபிள்யூ எல்ம் மற்றும் கிரீன் சான்வி ஆகிய இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை இரவில் மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணிக்கும் ‘எம்.வி. மிசோஸ் கேஸ்’ (MV Misos Case) என்ற கச்சா எண்ணெய் ஏற்றி வரும் வணிகக் கப்பல், ஹார்முஸ் நீர்ச்சந்தியைப் பாதுகாப்பாகக் கடந்துள்ளது. 2,70,000 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயுடன் இந்தக் கப்பல் வரும் ஜூன் 3-ஆம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 3,422 இந்திய கப்பல் ஊழியர்கள் பாதுகாப்பாகத் தாய்நாடு திரும்புவதற்கு வழிவகை செய்துள்ளதாகவும் இந்தியா முழுவதும் உள்ள துறைமுகங்களின் செயல்பாடுகள் வழக்கம் போல் தங்குதடையின்றி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















