தற்காலிகப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா- ஈரான் இருநாடுகளுக்கும் இடையே புதிய வரைவு ஒப்பந்தம் அதிபர் ட்ரம்பின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்ன அம்சங்கள் உள்ளன என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கிய ஈரான்- அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டுவர சவூதி அரேபியா கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. தற்காலிக போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்ட இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கான இடைத்தரகராக பாகிஸ்தான் இருந்து வருகிறது.
இதன் விளைவாக, தற்காலிக போர்நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கவும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பந்தத்தின் வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறியுள்ள ஈரான், தங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே எந்தவொரு உடன்பாடும் முழுமையானதாகக் கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டம், அமெரிக்கத் தடை நீக்கம் மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
எந்தவித சுங்க கட்டணமும் இல்லாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். 30 நாட்களுக்குள் அப்பகுதியில் உள்ள அனைத்து கண்ணிவெடிகள் ஈரானால் அகற்றப்படும். வணிகக் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியவுடன் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை திரும்பப் பெறப் படும் போன்ற அம்சங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது.
60 நாட்கள் நடைபெறும் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈரானிடம் உள்ள சுமார் 970 பவுண்டு செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அகற்றுவது மற்றும் செறிவூட்டப்பட்ட சுமார் 10 டன் கூடுதல் அணுப் பொருள் குறித்தும் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இஸ்ரேலுக்கு உடன்பாடு இல்லையென்றாலும் லெபனான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக 300 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மறுசீரமைப்புத் திட்டத்தை உருவாக்க ஈரானுக்கு அமெரிக்கா உதவும் என்றும், இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இந்த நிதி வழங்கப்படும் என்றும் அது சர்வதேச முதலீட்டு நிதியாக இருக்கும் என்றும், எண்ணெய் மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் உட்பட அமெரிக்க நிறுவனங்கள் ஈரானுக்குள் அனுமதிக்கப் படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சுமார் 24 பில்லியன் டாலர் நிதி சொத்துக்களை மீட்கவும் ஈரான் முயற்சி செய்து வருகிறது.
பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகள் மூலமாகவே பெரும்பாலான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதால், இரு தரப்பும் ஒரே மாதிரியான வரைவுத் திட்டத்தின் கீழ் தான் செயல்படுகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இருப்பினும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
















