டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடவேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி விவசாயிகளின் பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய அரசு மறுபரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை முற்றிலும் தடுக்க, குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனைகளை வழங்கி, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசு மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுத்து, தடையற்ற மற்றும் சீரான மின்விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும். மேகதாது அணை விவகாரத்தில், இரு மாநிலங்களுக்கிடையில் எந்தவித பிரச்னையும் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆயிரக்கணக்கான டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
















