நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட சோழர் காலத்து செப்புப் பட்டயங்கள் விரைவில் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
134வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதனை கோயம்பேடு எஸ் எஃப் வில்லேஜில் உள்ள பூங்காவில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், நெதர்லாந்திலிருந்து சோழர் காலத்து செப்புப் பட்டயங்களை பிரதமர் மோடி மீட்டுக் கொண்டு வந்ததையும், சோழர்களின் பெருமையை உலகிற்கு பிரதமர் எடுத்துரைத்ததையும் குறிப்பிட்டார்.
இந்தச் செப்புப் பட்டயங்களை விரைவில் தமிழ்நாட்டில் அந்தந்தப் பகுதிகளுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எல்.முருகன் தெரிவித்தார்.
















