திருச்செந்தூர் முருகன் கோயிலில் நீண்ட நாட்களாக பணிபுரியும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் முதியோருக்கான தரிசனம் என மூன்று வரிசைகளில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆனால், அர்ச்சகர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு பணியாளர்கள் கூட்டாக சேர்ந்து பக்தர்களிடம் பணம் பெற்று தரிசனத்திற்கு குறுக்கு வழியில் அனுப்புவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் லஞ்சம் பெற்ற புகாரில் அர்ச்சகர் மற்றும் 2 பாதுகாப்பு பணியாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும், கோயிலுக்கு சொந்தமான கடைகளில் வாடகை வசூலிப்பது, சொத்துக்களுக்கு வாடகை நிர்ணயம் செய்வது ஆகியவற்றில் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவோடு சில உயர் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக அமைச்சரிடம் கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விதிமுறை மீறலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் ஓரிரு நாட்களில் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















