தஞ்சையில் தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகியின் குடும்பத்திற்கு 55 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான மகேந்திரன் என்பவர் அதிமுகவில் பிளவு ஏற்படுவதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், திருப்பனந்தாள் பகுதியில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இதுபோன்ற செயல்களில் இனியாரும் ஈடுபடக் கூடாது என கேட்டுக்கொண்டார். மகேந்திரனின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 30 லட்சம் ரூபாய், தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் என மொத்தம் 55 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என இபிஎஸ் அறிவித்தார். மேலும், மகேந்திரனின் ஒரு வயது மகளின் கல்வி செலவு முழுவதையும் அதிமுகவே ஏற்கும் எனவும் கூறினார்.
















