தவெக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விவசாயத்தை விட விளையாட்டு மேன்மையானது என பேசியதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நெற்றியில் நாமம் இட்டும், தலையில் பச்சை துண்டு போட்ட படியும் விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி நெல்லையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், பயிர்க்கடனை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















