சட்டமன்றத் தேர்தலின் தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவில் பென் நிறுவனத்தை நம்பியதே மிகப்பெரிய தவறு என திமுக தொண்டர்கள் குமுறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கருத்துக்களை பதிவு செய்ய உருவாக்கப்பட்ட இணையப்பக்கத்திலும் தொண்டர்கள் பதிவு செய்யும் புகார் கட்சித் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் வெற்றி பெற்று திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்து புதிய சாதனையை படைப்போம் என முழங்கிக் கொண்டிருந்த திமுக படுதோல்வியை சந்தித்திருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தோல்வியை சந்தித்துள்ளனர். பெரியண்ணன் தொணியில் செயல்பட்ட அமைச்சர்கள், தொண்டர்களை மதிக்காத கட்சித் தலைமை என அடுக்கான புகார்கள், தோல்விக்கான காரணங்களாக முன்வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகளுக்கான காரணங்களை புரிந்து கொண்டு கட்சியை மேம்படுத்த அடிமட்டத் தொண்டர்கள் தங்களின் கருத்துக்களை தெரியப்படுத்த உடன்பிறப்புகள் எனும் இணையப்பக்கத்தை திமுக தலைமை தொடங்கியது.
தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களின் கருத்துக்களை உடன்பிறப்புகள் இணையப்பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
அதில் ஏராளாமானோர் கட்சித் தொண்டர்களின் உழைப்புக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்காமல், பென் எனும் வியூக நிறுவனத்தை முழுமையாக நம்பி தேர்தலை சந்தித்ததே தோல்விக்கான காரணம் என தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.
அதோடு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக சென்று கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து அங்குள்ள பிரச்னைகள் குறித்தும், காரணங்கள் பற்றியும் கேட்டறிய அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவும் தங்களின் ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த குழு ஆய்வின் போது யாரும் எந்த தகவலையும் மறைக்காமல் உண்மையை கூற வேண்டும் எனவும், அப்போது தான் கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியதற்கு ஏற்ப நிர்வாகிகள் பலர் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.
அதில் அமைச்சர்கள் எனும் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என உத்தரவு பிறப்பிப்பதையே வாடிக்கையாக கொண்டிருந்த மூத்த நிர்வாகிகள் தான் தோல்விக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பென் நிறுவனத்தினர் கள ஆய்வு எனும் பெயரிலும், சர்வே எனும் பெயரில் பெரிய அளவில் மோசடி செய்திருப்பதாகவும், களத்தின் உண்மை நிலவரத்தை கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துவிட்டு, தங்களுக்கு சாதகமான அறிக்கையை மட்டுமே வழங்கியிருப்பதாகவும் தொண்டர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
மற்ற நிர்வாகிகளின் தோல்வியை ஏற்றுக் கொண்டாலும் கூட கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராயும் போது அப்பகுதி நிர்வாகிகள் அனைவரின் புகாரும் சேகர்பாபுவின் மீதே திரும்பியுள்ளது.
சென்னையின் முதலமைச்சராக தன்னை நிறுத்திக் கொண்ட சேகர்பாபு, தன்னை மீறி என்ன நடக்கும் என்ற ஆணவத்தில் செயல்பட்டதே மு.க.ஸ்டாலினின் தோல்விக்கு காரணம் எனவும் நிர்வாகிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எந்தெந்த தொகுதிகளில் திமுக தோற்கிறதோ அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பதவி பறிக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதன் படி கொளத்தூர் தொகுதியின் மாவட்டச் செயலாளராக இருக்கும் சேகர்பாபுவின் பதவியை பறிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் அளித்திருக்கும் புகார் மீது கூடுதல் கவனம் செலுத்துவதோடு, பென் நிறுவனத்தின் நாடக வேலைக்கு துணைபோகாமல் உண்மையான தொண்டர்களின் உணர்வுக்கும், உழைப்புக்கும் மதிப்பளிக்க வேண்டும் என திமுக அனைவரும் குமுறியுள்ளனர்.
















