டாஸ்மாக் பார்களுக்கு புதிதாக உரிமம் வழங்குவதில், புதிய டெண்டர் விதிமுறைகளை உருவாக்க டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் 4 ஆயிரத்து 765 மதுக்கடைகளில், 2 ஆயிரத்து கடைகளில் மட்டும் பார்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கான, ஒப்பந்தம் நடப்பாண்டு ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், சட்டசபை தேர்தலால் ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிதாக உரிமம் வழங்கும் டெண்டரில் புதிய விதிகள் உருவாக்கப்படவுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பார் டெண்டரில், மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள மதுக்கடைகளின் மாத சராசரி விற்பனை தொகையில் 1.80 சதவீதம், பேரூராட்சியில் 1.60 சதவீதம், ஊராட்சிகளில் 1.40 சதவீதம், மலை பகுதிகளில் 1.20 சதவீத தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விலைப் புள்ளி வழங்குவோருக்கு பார் உரிமம் வழங்கப்படும் என்றும், மூன்று மாத தொகையை டிபாசிட் தொகையாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
















