மேற்கு வங்கத்திலிருந்து சுமார் 4,800 ஊடுருவல்காரர்கள் வங்கதேசத்திற்கு நாடுகடத்தப் பட்டுள்ளதாகவும், மேலும் 836 பேர் நாடு கடத்தக் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மேற்குவங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் முதல்முறையாக பாஜக அரசு அமைந்த பிறகு, சட்டவிரோத ஊடுருவல்காரர்களைக் கண்டறிந்து நாடு கடத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
மாநிலத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரைக் கண்டறிந்து நாடு கடத்துவதற்கான புதிய 3D கொள்கை கண்டறிதல், நீக்குதல் மற்றும் வெளியேற்றுதல் என்ற அடிப்படையில் கடுமையான நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் கண்டறியப் படும் வெளிநாட்டினர் குறிப்பாக வங்கதேசத்தவர்களுக்கு தஞ்சம் அளிக்கவோ அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவோ கூடாது என்றும், அதற்குப் பதிலாக அவர்களை நேரடியாக எல்லையில் உள்ள எல்லை காவல் படையினர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவு பிறப்பிருந்திருந்தார்.
மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் பெறும் அரசு நலத்திட்ட உதவிகள் கண்டறியப்பட்டு, அவை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், மேற்கு வங்கத்தின் எல்லை மாவட்டங்களில் சோதனைகளும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், அரசின் சட்டப் பூர்வமான நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக, பலர் தாங்களாகவே வங்கதேசம் திரும்புவதற்காக எல்லை சோதனை சாவடிகளில் குவிந்து வந்தனர்.
இந்நிலையில், பாஜகவின் சிறப்புப் பயிற்சி முகாமுக்கான ஆயத்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் சுவேந்து அதிகாரி, 4,800 சட்டவிரோத ஊடுருவல்காரர்கள் வங்கத் தேசத்திற்கு நாடு கடத்தப் பட்டுள்ளதாகவும் சுமார் 836 பேர் திருப்பி அனுப்பப்படக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள ஹகிம்பூர் எல்லையில் அரசின் அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஆவணங்கள் இல்லாத பல சட்ட விரோத ஊடுருவல் காரர்கள் தாங்களாகவே வெளியேறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதும், ‘சிக்கன்ஸ் நெக்’ மேற்குவங்க அரசின் வழித்தடம் உள்ளிட்ட பகுதிகளில் எல்லை வேலி அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துவதும் முன்னுரிமைப் பணிகளாக நடைபெற்று வருவதாகவும் முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்படி எல்லை வேலி அமைப்பதற்காக சுமார் 100 கி.மீ நீளமுள்ள நிலம் எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் சட்டங்களின் கீழ் சட்டவிரோதக் குடியேற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் கீழ் தகுதி பெறாதவர்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி நேரடியாக எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் தொடங்கிவிட்டதாக அறிவித்த மேற்கு வங்க முதல்வர் , வரும் ஆகஸ்ட் ஒன்றாம் முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இதன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் முடிவடையும் என்றும், தொடர்ந்து தொகுதி மறுவரையறை பணிகள் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியான ‘அன்னபூர்ணா யோஜனா’ (Annapurna Yojana) திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 50 லட்சம் பெண்களுக்கு தலா 3,000 ரூபாய் வழங்கப் பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதல்வர் சுவேந்து அதிகாரி, இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 28 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பயனடைந்ததாக தெரிவித்துள்ளார்.
முந்தைய மம்தா பானர்ஜியின் ஆட்சியில் வழங்கப் பட்ட லட்சுமி பண்டார்’ திட்டப் பட்டியலில் இடம்பெற்றிருந்த சுமார் 27 லட்சம் பேர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும், பெண்களுக்கு மட்டுமேயான இத்திட்டத்தின் கீழ் சுமார் மூன்று லட்சம் ஆண்கள் பலன் பெற்றுள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ள முதல்வர் சுவேந்து அதிகாரி இது “ஆபத்தான ஊழல்” என்றும் கூறியுள்ளார்.
















