போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்கா ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு வேறு வழியில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அமெரிக்க ஈரான் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்தை மீறியுள்ள ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் இந்த தாக்குதல்கள் அடுத்த 7 நாட்களுக்குத் தொடரும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதற்கு பதிலடியாக ஈரானின் பல்வேறு நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தலைநகர் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையம் அருகிலும் இஸ்பஹான் மற்றும் தப்ரீஸ் நகரங்களிலும் தீவிர தாக்குதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் மீது தாக்குதல்களைத் தவிர்த்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் அறிவுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அது இஸ்ரேலின் சொந்த முடிவு என்றும் அதன்பிறகு அமெரிக்காவிடமிருந்து எதையும் இஸ்ரேல் எதிர்பார்க்க முடியாது என்றும் அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான ஒப்பந்தத்தை எட்டுவதில் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் அதை எதிர் தாக்குதல் நடத்தி கெடுக்க வேண்டாம் என்றும் இஸ்ரேல் பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதிபர் ட்ரம்பின் கோரிக்கையை முதலில் நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பின்னர் ஓரளவுக்கு ஒப்புக்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் தொடர்பான முடிவுகளை எடுப்பவனாக தானே இருப்பதால் எல்லா முடிவுகளையும் தானே எடுப்பதாகவும், நெதன்யாகு எந்த முடிவுகளையும் எடுப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், இஸ்ரேல் மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள், பேச்சுவார்த்தைகளைத் தொடரும் தமது விருப்பத்தைப் பாதிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாத தாக்குதல்களாகவே உள்ளன என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத பட்சத்தில் அந்நாடு மீதான பொருளாதாரத் தடை தொடரும் என்றும், தரைப்படை ராணுவத் தாக்குதல்களையும் அமெரிக்கா முன்னெடுக்கும் என்றும் அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
என்றாலும் கள எதார்த்தம் வேறுவிதமாக உள்ளது. ஈரானுக்கு எதிராக “அளவுக்கு மீறிய சக்தியைப் பயன்படுத்துவோம்” என்று ஒரு காலத்தில் மிரட்டிய அதே டிரம்ப் தான் இப்போது, மத்திய கிழக்கில் தான் ஏற்படுத்திய குழப்பத்தைச் சரிசெய்ய பாகிஸ்தானை அமைதியாகப் பயன்படுத்தி வருகிறார்.
போருக்கு முன்னதாகவே கடந்த பிப்ரவரி 21ம் தேதியே ஈரானுக்கு எதிரான எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் தோல்வியில் தான் முடியும் என்றும், அது அமெரிக்காவை முட்டுச்சந்தில் கொண்டுவந்து நிறுத்தும் என்றும் சவுதி அரேபியா எச்சரித்திருந்தது.
அப்போது சவூதியின் குரலை ஆணவத்தோடு நிராகரித்த ட்ரம்ப், இப்போது பாகிஸ்தான் வழியாக போரில் இருந்து வெளியேற முயன்றும் திணறிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்பு மசோதாவின் 224 பிரிவு, அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இராணுவ அமைப்புகளின் முக்கிய பகுதிகளை ஒன்றிணைத்துள்ளது.
இதன் மூலம் கூட்டு ஆயுத உற்பத்தி, பகிரப்பட்ட செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்கள், சைபர் மற்றும் தரவுகள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு நெட்வொர்க் இஸ்ரேலின் உளவுதுறையினர் வசம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது அமெரிக்க உயர் அதிகாரிகள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய நபர்கள் மீது உளவு பார்ப்பதற்காக, இஸ்ரேலை ஒரு “முக்கியமான” உளவு சாதனமாக பென்டகன் பயன்படுத்தி வருகிறது.
அமெரிக்காவுடன் பாதுகாப்பு கூட்டாண்மை என்று சொன்னாலும் உண்மையில் இது இஸ்ரேலின் கைப்பற்றல் என்று கூறப்படுகிறது.
சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்காவின் அரசியல் அமைப்பு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளதாகவும் இனி ஈரான் போருக்கான தீர்வு அமெரிக்காவிடமும் இல்லை; இஸ்ரேலிடமும் இல்லை. மாறாக அது போரில் பங்கேற்காத மத்திய கிழக்கு நாடுகளிடம் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
















