மீண்டும் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவி ஏற்றதில் இருந்து ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு சரிந்துள்ளது. சுமார் 65 சதவீதத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களின் ட்ரம்ப் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளதாக புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவேன் என்ற முழக்கத்துடன் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் பல்வேறு திட்டங்களோடு அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதுமே அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.
தேர்தல் பரப்புரையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியுடன் இருப்பதாக கூறிய அதிபர் ட்ரம்ப், சீனா உட்பட உலக நாடுகள் மீது வர்த்தகப் போரைத் தொடங்கினார். வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபரைக் கைது செய்தார்.
உலகில் குறுகிய காலத்தில் அதிகமான போரை நிறுத்தியதாக பெருமை பேசிய அதிபர் ட்ரம்ப், கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கினார்.
இன்னும் முடிவுக்கு வராமல் நீடித்துக் கொண்டிருக்கும் ஈரான் போர் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை சீர்குலைந்துள்ளது. எண்ணெய் விலை அதிகரிப்பால் அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கடும் பொருளாதாரப் பாதிப்பில் சிக்கியுள்ளன.
இந்நிலையில் ராய்ட்டர்ஸ்-இப்சோஸ் Reuters-Ipsos நடத்திய கருத்துக்கணிப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகச் செயல்பாடுகள் மீதான அமெரிக்க மக்களின் ஆதரவு குறைந்து வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
சுமார் 35 சதவீத அமெரிக்கர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் அதிபர் ட்ரம்ப் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக இந்தக் கருத்துக் கணிப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதக் கருத்துக்கணிப்பில் 34 சதவீதமாகவும் 2017-டிசம்பரில் ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் 33 சதவீதமாகவும் இருந்ததைப் போலவே இப்போதும் அதிபர் ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு மிக குறைந்த அளவிலேயே உள்ளது.
குறிப்பாக பணவீக்கத்தை அதிபர் ட்ரம்ப் கையாண்ட விதம் மற்றும் விலை உயர்வு மற்றும் குடும்பச் செலவுகள் விவகாரத்தில் அதிபரின் அணுகுமுறை ஆகியவையே மக்கள் அதிருப்திக்குரிய முக்கிய விஷயங்களாக அமைந்துள்ளன. மொத்தத்தில் சுமார் 70 சதவீத அமெரிக்கர்கள் ட்ரம்ப் நிர்வாகத் திறன் மீது அதிருப்தியில் உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
குறிப்பாக ஈரான் போர் விளைவாக சர்வதேச எண்ணெய் விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்ததால் அமெரிக்காவில் ஒவ்வொரு குடும்பங்களின் மாத செலவுகள் அதிகரித்துள்ளன. வெறும் 17 சதவீதம் மக்கள் இந்த நிலைமை சரியாகும் என்று எதிர்பார்க்கும் நிலையில் சுமார் 59 சதவீத அமெரிக்கர்கள் அடுத்த ஆண்டில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயரக்கூடும் என்று உறுதியாக நம்புகின்றனர்.
பெட்ரோல்; டீசல் விலை உயர்வு மட்டுமே அமெரிக்கர்களின் அதிருப்திக்குக் காரணமாக இல்லை. கூடுதலாக அதிபர் ட்ரம்ப் நாட்டின் பணவீக்கத்தைக் கையாளும் விதத்தில் 70 சதவீத அமெரிக்கர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், ஐந்தில் ஒரு பங்குக்கும் சற்று அதிகமானோர் மட்டுமே அதிபரின் அணுகுமுறையை ஆதரிப்பதாகவும் இந்தக் கருத்துக்கணிப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
செலவுகளைக் குறைப்பதாக தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளை ட்ரம்ப் வழங்கியிருந்த நிலையில் பல அமெரிக்கக் குடும்பங்களில் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.
வரும் நவம்பரில் இடைக்கால தேர்தல் வரவிருக்கும் நிலையில் அதிபரின் மக்கள் செல்வாக்கு குறைந்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது. முன்னாள் அதிபர் ஜோ பைடன் பதவிக்காலத்தில் 63 சதவீத மக்கள் அதிருப்தியில் இருந்தனர் என்றும் பணவீக்கம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி காரணமாகவே இறுதியில் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து பைடன் விலகினார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், 36 சதவீத அமெரிக்கர்கள் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை ஆதரிப்பதாகவும், 25 சதவீதத்தினர் செலவுகளை விட போரினால் ஏற்படும் நன்மைகள் அதிகம் என்று நம்புவதாகவும் இந்த கருத்துக் கணிப்பில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் வெளியுறவுக் கொள்கை சவால்களும் உள்நாட்டுப் பொருளாதாரப் பிரச்சினைகளும் அதிகமாகி வருவதால் ட்ரம்புக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை இந்தப் புதிய கருத்துக் கணிப்பு வெளிக்காட்டியுள்ளது.
















