திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா கட்சிகளைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியிலும் பிளவு ஏற்பட உள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்ததை அடுத்து அக்கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்து பல துண்டுகளாக சிதறியது. இதேபோல், மகாராஷ்டிராவில் செயல்படும் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் உத்தவ் சிவசேனா பிரிவிலும் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.
இந்த வரிசையில் உத்தரப்பிரதேசத்தில் செயல்படும் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியிலும் பிளவு ஏற்பட உள்ளதாக மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பரபரப்பை கிளப்பி உள்ளார். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், தன்னை பாஜகவில் இணைக்ககோரி மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், சுரங்க ஊழல், கோமதி நதிக்கரை மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்குகளின் விசாரணை நெருங்குவதால் சமாஜ்வாதி தலைவர்கள் அச்சத்தில் உள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவே அவர்கள் பாஜகவை அணுகுவதாகவும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சி வலுவாக உள்ளதாக கூறியுள்ளார்.
















