பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து சென்னையில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை, குற்றங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து, பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சென்னை எழும்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், திமுக அரசுக்கும், தவெக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என தெரிவித்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் சந்திப்பதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், இதற்கு முந்தைய ஆட்சி பெண்கள் பாதுகாப்பின்மையினால் தான் வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும், அதேபோல் இந்த ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம், குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். தவெக ஆட்சியில் காவல்துறை செயல்பட முடியாமல் இருப்பதாகவும் கூறினார்.















