தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, ஆளுநரை முழுவதுமாக அவையில் அமர வைத்தது தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர், தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய கீதம் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்றும், ஆனால், ஆளுநர் உரையில் இரண்டு முறை தேசிய கீதம் இசைக்கப்பட்டதாக கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மாநிலக் கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவோம் என கூறினார். மேலும், இடையில் தான் வந்தே மாதரம் பிரச்சனை வந்ததாகவும் கூறினார்.
பதவி ஏற்ப விழாவிற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாடப்படும் என தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளிநடப்பு செய்தததாகவும், நடப்பாண்டு தமிழ்நாடு ஆளுநர் முழு உரையை வாசித்ததாகவும் கூறினார்.
மாநிலக் கொள்கையில் எப்போது உறுதியாக இருப்போம் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு ஆளுநரை முழுவதுமாக அவையில் அமர வைத்தது தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், ஒருமுறையா இருமுறையா என்பதை தீர்மானிக்க வேண்டியது தாம்தான் எனவும், அதைப்பற்றி மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் கூறினார்.
மேலும், நடப்பது எல்லாம் நல்லதாகவே நடந்துள்ளது இனியும் நல்லதே நடக்கும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.
















