சர்வதேச யோகா தினத்தையொட்டி கொல்கத்தாவில் 35 ஆயிரம் பேருடன் இணைந்து பிரதமர் மோடி யோகாசனம் செய்தார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்த வகையில், மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய யோகா நிகழ்வு நடைபெற்றது. மேற்குவங்க மாநிலத்தில் முதல்முறையாக யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, 35 ஆயிரம் பேருடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினம் உலகின் மிகப்பெரிய கூட்டு கொண்டாட்ட நாளாக மாறியுள்ளதாக தெரிவித்தார். யோகா நம் உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருப்பதுடன், நமது ஆற்றலின் அளவை அதிகரிக்கிறது என கூறியுள்ளார்.
இமயமலை முதல் இந்திய பெருங்கடல் வரையிலும், மேற்குவங்கம் முதல் சவுராஷ்டிரா வரையிலும் நாடு முழுவதும் யோகாவின் ஆற்றல் நிறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். முழு நாடும், உலகமும் யோகா மூலம் ஒன்றோடொன்று இணைந்துள்ளது எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, இதுவே யோகாவின் வலிமை என தெரிவித்துள்ளார். மேலும், யோகா பயிற்சியை நமது வருங்கால சந்ததியினரின் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் நீச்சல் குளத்தில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், மூச்சுப்பயிற்சி உள்ளிட்ட யோகாசனங்கள் செய்தனர்.
இதேபோன்று கொல்கத்தாவில், கங்கை நதியில், படகுகளில் கடற்படை வீரர்கள் யோகாசனம் செய்தனர். அப்போது பத்மாசனம், வஜ்ராசனம் உள்ளிட்டவைகளை செய்து வீரர்கள் அசத்தினர்.
லடாக்கின் புகழ்பெற்ற பாங்கோங் சோ ஏரிக்கரையில், கடல் மட்டத்திலிருந்து 14 ஆயிரத்து 91 அடி உயரத்தில் இந்தோ – திபெத் படை வீரர்கள் யோகாசனங்களை செய்தனர்.
















